மகாகவி பாரதியார் நினைவு நாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை
மகாகவி பாரதியார் 1882-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னச்சாமி அய்யர் – இலட்சுமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். எட்டயபுரத்தில் தனது தொடக்கக் கல்வியை பயின்ற அவர், சிறுவயதிலேயே தமிழில் கவிதை எழுதும் திறனை வெளிப்படுத்தினார். தனது 11-வது வயதில் புலவர்கள் அவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினர். தந்தை மறைந்தபின், தனது 15-வது வயதில் சில காலம் காசிக்குச் சென்ற பாரதியார், அங்குள்ள ஜெய்நாராயண் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காளம், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளில் தேர்ச்சி பெற்றார். 1898-ஆம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர் 1902-ஆம் ஆண்டு எட்டயபுரம் அரசவையில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். 1904-ஆம் ஆண்டு மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்தார். அதன்பிறகு ஜி. சுப்பிரமணிய அய்யரின் அழைப்பின் பேரில் சென்னை வந்த அவர், “சுதேசமித்திரன்” நாளிதழில் உதவி ஆசிரியராகவும், “இந்தியா” வார இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1910-ஆம் ஆண்டு “கர்மயோகி” என்ற மாத இதழையும் தமிழில் நடத்தினார். கவிதை எழுதுவதையும், நாட்டுக்காக உழைப்பதையும் தனது வாழ்வின் நோக்கமாகக் கொண்ட பாரதியார், சுதேசமித்திரன், இந்தியா, சக்கரவர்த்தினி, பாலபாரதா உள்ளிட்ட பத்திரிகைகளில் கட்டுரைகள் மற்றும் கவிதைகளை தொடர்ந்து வெளியிட்டார். அவற்றின் வாயிலாக மக்களிடையே விடுதலை உணர்வையும் நாட்டுப்பற்றையும் வளர்த்தார். தாய்நாட்டின் மீது ஆழ்ந்த பெருமிதம் கொண்டிருந்த பாரதியார், நாட்டின் எதிர்கால வளர்ச்சி குறித்த தொலைநோக்குச் சிந்தனையையும் கொண்டிருந்தார். கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும், நாட்டின் வளங்கள் சிறப்பாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை தனது படைப்புகளில் வெளிப்படுத்தினார்.