நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம், தலைவர் சிங்கராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டு, ஒரு முட்டையின் விலை ரூ.5.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. நாமக்கல் மண்டலத்தில் கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் முட்டையின் கொள்முதல் விலை ரூ.5.70 ஆக இருந்தது. பின்னர் தொடர்ந்து அதிகரித்து, ஜூலை 23-ம் தேதி ரூ.6.80-ஐ எட்டியது. இதுவே முட்டை விலை வரலாற்றில் இதுவரை பதிவான அதிகபட்ச விலையாக இருந்தது.
Advertisement
அதன்பிறகு விலை படிப்படியாக குறைந்து, கடந்த மாதம் 21-ம் தேதி ரூ.5.20 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து 16 நாட்களுக்குப் பிறகு, கடந்த 6-ம் தேதி முட்டை விலை 5 காசுகள் உயர்ந்தது. தொடர்ந்து 7, 8, 9-ம் தேதிகளில் தலா 5 காசுகள் வீதம் விலை அதிகரித்த நிலையில், நேற்று ஒரே நாளில் மேலும் 10 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் முட்டையின் கொள்முதல் விலை தற்போது ரூ.5.50 ஆக உள்ளது. முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.