நெல் விதை உற்பத்தி, விநியோக மானியத்திற்கு சிறப்புத் திட்டம்: ரூ.34.72 கோடி மாநில நிதி ஒதுக்கீடு
தமிழக சட்டசபையில் 2026-27ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார். இதில், நெல் விதை உற்பத்தி மற்றும் விதை விநியோக மானியத்திற்காக மாநில அரசு புதிய சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது.
அமைச்சர் வினோத் கூறியதாவது:
விவசாயிகளுக்கு தேவையான வேளாண் இடுபொருட்கள் உரிய பருவத்தில் போதுமான அளவில் கிடைப்பதை அரசு தொடர்ந்து உறுதி செய்யும். நெல் மகசூலையும் உற்பத்தித்திறனையும் உயர்த்துவதில் தரமான விதைகளின் பங்கு முக்கியமானது. ஆனால், தரமான நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோகத்திற்காக வழங்கப்பட்டு வந்த மத்திய அரசின் மானியம் 2026-27ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளது.இந்த சூழலில், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களது கோரிக்கையை ஏற்ற மாநில அரசு, நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கு மாநில நிதியில் இருந்து மானியம் வழங்க முடிவு செய்துள்ளது.அதன்படி, விதைப்பண்ணைகள் அமைத்து 7,730 மெட்ரிக் டன் சான்றளிக்கப்பட்ட நெல் விதைகளை உற்பத்தி செய்து தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமைக்கு வழங்கும் விவசாயிகளுக்கு நெல் விதை உற்பத்தி மானியம் வழங்கப்படும்.
மேலும், 14,570 மெட்ரிக் டன் சான்றளிக்கப்பட்ட நெல் விதைகளை மானிய விலையில் விநியோகிப்பதற்கும் நிதி ஒதுக்கப்படும்.இந்தத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக 2026-27ஆம் ஆண்டில் மாநில அரசின் நிதியிலிருந்து ரூ.34 கோடியே 72 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் வினோத் அறிவித்தார்.