நீண்ட கொம்புகளுடன் காளையை அழைத்து திருப்பதிக்கு நடைபயணம் மேற்கொண்ட பக்தர்
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பிரேம் கோண்டு என்ற பக்தர், அரிய வகையான கங்கராஜ் இனக் காளையை அழைத்துக் கொண்டு திருப்பதியை நோக்கி பல நாட்களாக நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.தற்போது அவர் சூரியாபேட்டை பகுதிக்கு வந்தடைந்துள்ள நிலையில், இன்று அல்லது நாளைக்குள் திருப்பதியை சென்றடைவார் என கூறப்படுகிறது. நீண்ட கொம்புகளும் வலிமைமிக்க தோற்றமும் கொண்ட அந்த காளை, வழியெங்கும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.தனது யாத்திரை குறித்து பிரேம் கோண்டு கூறியதாவது: "எங்கள் குடும்பத்தில் கடந்த 150 ஆண்டுகளாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கங்கராஜ் இனக் காளையுடன் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கமாக உள்ளது.
முன்னோர்கள் பின்பற்றிய இந்த மரபை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்.நாங்கள் செல்லும் ஒவ்வொரு புனிதத் தலத்திலும் இந்த காளையை நந்தீஸ்வரரின் வடிவமாகக் கருதி அழைத்துச் செல்கிறோம். இவ்வாறு செய்வதன் மூலம் கைலாசநாதரின் அருள் கிடைக்கும் என்பது எங்கள் நம்பிக்கை. முதலில் ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுன சுவாமியை தரிசித்தோம். அதன்பின் தற்போது திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்க உள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.