நீங்கள் கற்றலை ஒருபோதும் நிறுத்தக்கூடாது; மத்திய பல்கலை பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வலியுறுத்தல்
திருவாரூர்:பட்டப்படிப்பை முடித்த பிறகும் தொடர்ந்து புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் மனப்பான்மையை மாணவர்கள் கைவிடக்கூடாது என்று துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.திருவாரூரில் செயல்பட்டு வரும் மத்தியப் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட அவர், பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த விழாவில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார்மேலும், இந்த நாள் பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்துள்ளதாக அவர் கூறினார். தற்போதைய சூழலில் கல்வியின் தரத்தை தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள் மூலம் மட்டும் மதிப்பிட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுயமாக சிந்திக்கும் திறன், குழுவாக இணைந்து செயல்படும் திறன் மற்றும் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கற்றுக்கொள்ளும் ஆர்வம் போன்ற அம்சங்களே கல்வியின் உண்மையான அளவுகோல்களாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்கும் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு தமிழக மத்தியப் பல்கலைக்கழகம் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அவர் பாராட்டினார்.பட்டம் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், இந்த வெற்றி மாணவர்களுக்கானது மட்டுமல்ல என்றும் குறிப்பிட்டார்.
மாணவர்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு, அவர்களின் வெற்றிக்காக எப்போதும் பிரார்த்தித்த பெற்றோருக்கும் இந்தச் சாதனை உரியது என்று அவர் கூறினார்.பட்டம் பெற்ற பிறகும் கற்றலை நிறுத்தாமல், புதிய அறிவைப் பெறும் முயற்சியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.