நிதி நிர்வாகத்தை சீரமைக்க குறைந்தது 2 ஆண்டுகள் தேவை: அமைச்சர் மரிய வில்சன்
தமிழகத்தின் நிதி நிர்வாகத்தை மீண்டும் ஒழுங்குபடுத்த குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அவசியம் என நிதி அமைச்சர் மரிய வில்சன் சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் மாநிலத்தின் நிதி நிலைமை குறித்து பேசிய அவர், தற்போதைய நிதி சூழல் சீரற்ற நிலையில் இருப்பதாகக் கூறினார். அதிகரித்துள்ள கடன் சுமை, குறைந்த வருவாய் மற்றும் பல்வேறு நிதிசார் குறைபாடுகளுடன் கருவூலம் தற்போதைய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.இந்த நிலையை மாற்றுவதற்கான சீரமைப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், மாநிலத்தின் நிதி நிர்வாகத்தை மீண்டும் நிதி ஒழுங்குமுறை பாதைக்கு கொண்டு வர குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என்றும் அமைச்சர் விளக்கினார்.முதல்வரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட முந்தைய அரசியல் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாகக் கூறிய அவர், நிதி சீரமைப்புப் பணியிலும் அதேபோல் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
மேலும், நிதி ஒழுங்குமுறையுடன் கூடிய நல்லாட்சியின் மூலம் சமச்சீரான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை அடைந்த மாநிலமாக தமிழ்நாடு உயர்வடையும் என்றார்.குறுகியகால அரசியல் பலன்களை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்த முந்தைய அரசைப் போல அல்லாமல், நீடித்த கொள்கைகள் மற்றும் வெளிப்படையான, திறமையான நிர்வாகத்தின் மூலம் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் தொடர்ச்சியான வளர்ச்சியை இலக்காகக் கொண்டு தற்போதைய அரசு செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.