நடப்பாண்டின் முழு சூரிய கிரகணம்: வியப்பில் ஆழ்த்திய வானியல் நிகழ்வு
சூரியன் மற்றும் பூமிக்கு இடையில் நிலவு ஒரே நேர்கோட்டில் அமைந்து, சூரியனின் ஒளியை முழுமையாக மறைக்கும் நிகழ்வே முழு சூரிய கிரகணம் ஆகும். இந்த நிகழ்வின்போது பகல் நேரத்திலேயே வானம் இருண்டு, மாலை நேரத்தைப் போன்ற தோற்றம் உருவாகும். மேலும், சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான கரோனா மட்டும் பிரகாசமான வெண்மையான வளையமாகத் தெரியும். இதுவே முழு சூரிய கிரகணத்தின் முக்கிய சிறப்பாகக் கருதப்படுகிறது.விண்வெளியில் அரிதாக நிகழும் இந்த வானியல் நிகழ்வு நேற்று உலகின் பல பகுதிகளில் காணப்பட்டது. இந்த அற்புதமான காட்சியை ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் கண்டு ரசித்தனர்.ரஷ்யாவில் உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் நிலவு முதன்முதலில் சூரியனை மறைக்கத் தொடங்கியது. அப்போது சூரியனின் வெளிப்புற ஒளிவட்டத்தின் மங்கலான பிரகாசம் மட்டுமே தென்பட்டது.இதையடுத்து, ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்க்ஜாவிக்கில் நடைபெற்ற முழு சூரிய கிரகணத்தை வானியல் ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கண்டுகளித்தனர்.ஐரோப்பிய நாடுகளில் சூரியன் மறையும் நேரத்தில் கிரகணம் நிகழ்ந்ததால், கிரகணத்துடன் இணைந்த சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பதற்கான அபூர்வமான வாய்ப்பு மக்களுக்குக் கிடைத்தது.
குறிப்பாக, ஸ்பெயினில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு முழு சூரிய கிரகணம் நிகழ்ந்ததால், அந்த நாட்டில் மக்கள் உற்சாகத்துடன் இந்த நிகழ்வைக் கொண்டாடினர்.இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் சூரிய கிரகணத்தைப் பார்வையிட்டனர். அதேபோல், பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் மேல் பகுதி சூரிய கிரகணம் கடந்து சென்ற காட்சியையும் ஏராளமானோர் ஆர்வத்துடன் ரசித்தனர்.ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள், வடமேற்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகள், கனடாவின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் வட அமெரிக்காவின் சில இடங்களில் பகுதி சூரிய கிரகணம் தென்பட்டது. இந்திய நேரப்படி இரவு 11.16 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெற்றதால், இந்தியாவில் இருந்து இதைப் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.