தெற்கு ரெயில்வே புதிய பொது மேலாளராக சுப்பா ராவ் பொறுப்பேற்றார்
தெற்கு ரெயில்வேயின் புதிய பொது மேலாளராக சுப்பா ராவ் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.இதற்கு முன்பு இந்த பதவியில் ஆர்.என். சிங் பணியாற்றி வந்தார். அவரது பதவிக்காலம் ஜூலை 31, 2026 வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், அதன்பின் சுப்பா ராவ் புதிய பொது மேலாளராக நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.1987ஆம் ஆண்டு இந்திய ரெயில்வே சேவையில் தனது பணியைத் தொடங்கிய சுப்பா ராவ், உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளை வகித்த அனுபவம் பெற்றவர்.
தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பொறுப்பை ஏற்கும் முன்பு, சென்னை ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையின் (ICF) பொது மேலாளராக பணியாற்றினார்.அதற்கு முன்னதாக ஹப்பள்ளி, சேலம், செகந்திராபாத், மைசூரு மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் ரெயில்வேயின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றுள்ள அவர், பெங்களூரு ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் பொது கொள்கை மற்றும் மேலாண்மை தொடர்பான பட்டமேற்படிப்பையும் நிறைவு செய்துள்ளார்.