தலைநகர் டெல்லியின் தகுலா கவுன் பகுதியில் செயல்பட்டு வரும் 3 பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பள்ளிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக இமெயில் மூலம் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைந்து சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் 3 பள்ளிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
Advertisement
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் இருந்த மாணவர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். நீண்ட நேரம் நடைபெற்ற சோதனையில், பள்ளிகளில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும், மிரட்டல் வெறும் புரளி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இமெயில் மூலம் இந்த மிரட்டலை அனுப்பியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.