தமிழக கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி?
தமிழகத்தின் முக்கிய கோவில்களின் ஆன்மிக புனிதத்தன்மையை பாதுகாக்கும் வகையில், கோவில்களுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல இந்து சமய அறநிலையத் துறை தடை விதித்தது. இதையடுத்து, கோவில் நுழைவுவாயில்களில் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்கான லாக்கர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, அதற்கு கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த நடைமுறை தொடங்கிய சில காலத்திலேயே பல்வேறு கோவில்களில் செல்போன் தடை படிப்படியாக நடைமுறையில் இருந்து விலகி வருகிறதா என்ற கேள்வி பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கோவில்களுக்கு வருகை தரும் ஏராளமான பக்தர்கள் தங்களது விலை உயர்ந்த செல்போன்களை லாக்கரில் ஒப்படைத்துவிட்டு, தரிசனம் முடிந்ததும் மீண்டும் பெற்றுக்கொள்ள டோக்கன் வாங்கி நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக, அவசர நேரங்களில் குடும்பத்தினரை தொடர்புகொள்ள முடியாததால் முதியவர்கள் மற்றும் பெண்கள் சிரமங்களை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட சில முக்கிய கோவில்களில் பக்தர்களின் எதிர்ப்பை தொடர்ந்து செல்போன் வைப்பதற்கான கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், கண்காணிப்பு நடவடிக்கைகளும் ஓரளவு தளர்த்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.