தெரு நாய்கள் பிரச்சினை: தமிழக அரசு நடவடிக்கையில் சென்னை ஐகோர்ட் அதிருப்தி
தெரு நாய்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளை கட்டுப்படுத்த தமிழக அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரியவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மக்களை தெரு நாய்களின் தாக்குதலிலிருந்து பாதுகாப்பது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை அகற்ற வேண்டும் என்பதுடன் பல்வேறு வழிகாட்டுதல்களையும் வழங்கியிருந்தது.
இந்த உத்தரவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில், அனைத்து உயர்நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.அதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, உச்சநீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் புதுச்சேரி அரசுக்கு முன்பே உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் அறிக்கை தயாராக இருப்பதாகவும், அதை தாக்கல் செய்ய ஒரு வார அவகாசம் வழங்குமாறும் கோரப்பட்டது.
அந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், அறிக்கையை தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்கி, வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.விசாரணையின் போது, தெரு நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் தினசரி நடைபெற்று வருவதாகவும், குறிப்பாக குழந்தைகளே அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி மாதந்தோறும் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியிருந்தாலும், தெரு நாய்கள் பிரச்சினையை கட்டுப்படுத்த அரசு பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்ததற்கான அறிகுறிகள் எதுவும் வெளிப்படையாக தெரியவில்லை என்று நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலேயே தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசின் அறிக்கையில் விவரங்கள் இருக்கலாம்; ஆனால் நடைமுறையில் அதன் விளைவுகள் காணப்படவில்லை என்றும் கருத்து தெரிவித்தனர்.