தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய கேரள அரசு அனுமதி
பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தெரு நாய்கள் மற்றும் குணப்படுத்த முடியாத கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட நாய்களை கருணைக் கொலை செய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்கு கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் தெரு நாய்களை கொல்லலாம் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்த நிலையில், அதனடிப்படையில் கேரள அரசு இந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.சிகிச்சை அளித்தும் குணப்படுத்த முடியாத நாய்கள், தீவிரமாக காயமடைந்தவை, வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டவை அல்லது அதற்கான அறிகுறிகள் காணப்படும் நாய்கள் ஆகியவற்றை கருணைக் கொலை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பும் தனியாக ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
தகுதி பெற்ற கால்நடை மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தை நரம்பு வழியாக செலுத்தி மட்டுமே கருணைக் கொலை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், தெரு நாய்களுக்கு விஷம் கொடுப்பது அல்லது துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என வழிகாட்டுதல்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.