தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு: புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்கவில்லை
சென்னை அருகே கோவளத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடைபெறும் 31-வது தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாட்டில் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு நடத்தப்பட்டு வந்தது. கடந்த 2022-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெறாத நிலையில், 31-வது மாநாடு இன்று புதன்கிழமை கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்குகிறது.இந்த மாநாட்டுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்குகிறார். தமிழக முதல்-அமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கேரள முதல்-மந்திரி சதீசன், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.மாநிலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கட்டமைப்பு வசதிகள், நீர்வளப் பகிர்வு, கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை, குற்றத் தடுப்பு, எல்லை விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளது.காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் சூழலில், இந்த மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.மாநாட்டில் பங்கேற்பதற்காக அமித்ஷா இன்று மாலை 4.50 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்படுகிறார்.
இரவு 7.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் அவரை உயர் அதிகாரிகள் மற்றும் கட்சியினர் வரவேற்கின்றனர். பின்னர் அவர் காரில் கோவளத்திற்கு செல்கிறார்.இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் உள்ளிட்ட 5 மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்கின்றனர். தொடர்ந்து அமித்ஷாவுடன் அவர்கள் இரவு விருந்தில் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.நாளை வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு முதல்-மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு தொடங்குகிறது. மதியம் 1.30 மணி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தென்மாநிலங்களின் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார்.இதற்கிடையே, புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி மாநாட்டில் பங்கேற்கவில்லை என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால், துணைநிலை கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் ஆகிய இருவருக்கும் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், புதுச்சேரி துணைநிலை கவர்னர் கைலாசநாதன் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.