தென்காசி: குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் மீண்டும் குளிக்க அனுமதி; சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அருவிகளுக்கான நீர்வரத்து இன்று இயல்பு நிலைக்கு திரும்பியதைத் தொடர்ந்து, மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.கடந்த சில வாரங்களாக குற்றால அருவிகளில் நீர்வரத்து மிகவும் குறைவாக இருந்தது. இதற்கிடையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வந்த மழையால் கடந்த 30-ஆம் தேதி அருவிகளில் திடீரென நீர்வரத்து அதிகரித்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. பின்னர் அதே நாள் மாலையில் நீர்வரத்து சீரடைந்ததை அடுத்து அந்தத் தடை நீக்கப்பட்டது.அதன்பின், குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீரின் அளவு உயர்ந்தது.
இதையடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீண்டும் குளிக்க தடை அமல்படுத்தப்பட்டது.தொடர்ச்சியான மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் இரண்டாவது நாளாக நேற்றும் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் விடுமுறை நாளை முன்னிட்டு நீராட வந்திருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.இந்நிலையில், இன்று அருவிகளில் நீர்வரத்து சீராகியுள்ளதால் இரண்டு நாட்கள் தடைக்குப் பிறகு மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் குற்றாலத்திற்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.