திருவாரூரில் காவலரை தாக்கிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கைது
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காவல்துறை அதிகாரியை தாக்கியதாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தேநீர் கடையில் இன்று காலை, பணியை முடித்துவிட்டு ஓய்வில் இருந்த காவலர் வினோத் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்.அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி ராஜேஷ் அதிக மதுபோதையில் அங்கு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர், அமைதியாக இருந்த காவலர் வினோத்திடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.காவலர் எந்தவித பதிலும் அளிக்காமல் இருந்தபோதிலும், ராஜேஷ் தொடர்ந்து தகராறை தீவிரப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, காவலர் மீது அவர் திடீரென தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.இதையடுத்து அங்கிருந்த மற்ற காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு ராஜேஷை கைது செய்தனர். மேலும், அரசுப் பணியில் இருந்த காவலரை தாக்கியது, பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தியது மற்றும் மதுபோதையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட ராஜேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.