திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை சாய் பல்லவி
தமிழ் மற்றும் மலையாள திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் சாய் பல்லவி, திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.'பிரேமம்' திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சாய் பல்லவி, பின்னர் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் தனக்கென தனித்துவமான இடத்தை உருவாக்கியுள்ளார். நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அவர், கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறார். கவர்ச்சி காட்சிகளைத் தவிர்த்து, இயல்பான நடிப்பு மற்றும் மேக்கப் இல்லாத தோற்றம் ஆகியவற்றின் மூலம் ரசிகர்களிடையே தனி வரவேற்பைப் பெற்றுள்ளார்.தற்போது இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணா: பகுதி 1' திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்.
2026-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ள இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். மேலும் சன்னி தியோல், பிரியாமணி, ராகுல் ப்ரீத் சிங், ரவி துபே உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர்.இந்த சூழலில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வந்த சாய் பல்லவி சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த அவரை ரசிகர்கள் உற்சாகமாக சூழ்ந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.