தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்புக்கு எதிர்ப்பு: கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்
கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள அணைகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் மாநிலத்தின் குடிநீர் தேவைக்கே தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை இருப்பதாகக் கூறி, தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க முடியாது என கர்நாடக அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், தமிழகத்தின் ஜூலை மாத நீர் தேவையை கருத்தில் கொண்டு, அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது. இது மொத்தம் 4 டி.எம்.சி. தண்ணீருக்கு சமமாகும். இந்த உத்தரவு கர்நாடக விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும், அங்குள்ள நீர்ப்பாசனத் துறை அலுவலகத்துக்கு பூட்டு போட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.மண்டியா மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள், அரை நிர்வாண போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோல், மைசூருவிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்கிடையில், கன்னட அமைப்புகளின் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட தலைவர்கள், கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தால் மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதனிடையே, காவிரி நீர் பகிர்வு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்-அமைச்சருக்கு கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, வரும் 3-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் இரு மாநிலங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவால் கர்நாடகத்தில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து, அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.