தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், இன்று (செப்டம்பர் 19) விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மூலம் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (INCOIS) மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் வழங்கிய எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. செப்டம்பர் 18 மற்றும் 19 ஆகிய இரு நாட்களிலும் தூத்துக்குடி கடல் பகுதியில் வழக்கத்தைவிட அதிக உயரத்தில் அலைகள் எழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும், கடல் நீர் தாழ்வான கடலோரப் பகுதிகளுக்குள் புகும் வாய்ப்பும் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுக மேலாண்மை அறிவிப்புப் பலகை மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக சுற்றறிக்கை மூலம், இன்று ஒரு நாள் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.