தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரெயில் மோதி தாய் யானையும் குட்டியும் உயிரிழப்பு
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வாளையார் சாவடிப்பாரா புதுப்பதி வனப்பகுதியில் நேற்று இரவு சோகமான விபத்து ஒன்று நிகழ்ந்தது. நள்ளிரவு 11.45 மணியளவில் நான்கு யானைகள் அடங்கிய கூட்டம் ரெயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த மங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் அவற்றின் மீது மோதியது.இந்த விபத்தில் தாய் யானையும் அதன் குட்டியும் ரெயில் என்ஜின் சக்கரங்களில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. தகவல் கிடைத்தவுடன் வாளையார் வனத்துறையினரும் பாலக்காடு ரெயில்வே அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் யானைகளின் உடல்கள் தண்டவாளத்தில் இருந்து அகற்றப்பட்டன. பின்னர் சேதமடைந்த ரெயில் என்ஜின் சரிசெய்யப்பட்டு, ரெயில் தனது பயணத்தைத் தொடர்ந்தது.இந்த விபத்து நடைபெற்ற பகுதி, தமிழக எல்லையிலிருந்து சுமார் 300 முதல் 400 மீட்டர் தூரத்தில் உள்ள கேரள எல்லைப் பகுதியாகும்.
வளைவான தண்டவாளப் பகுதியில் ரெயில் வந்தபோது யானைகள் அதைக் கடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால், ரெயிலை இயக்கிய லோகோ பைலட்டால் யானைகளை முன்கூட்டியே கவனித்து வேகத்தைக் குறைக்க முடியாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், ரெயில் அதிக வேகத்தில் இயக்கப்பட்டதா என்பது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உலக யானைகள் தினத்தன்று நிகழ்ந்த இந்தச் சம்பவம், தமிழக-கேரள எல்லைப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.