டெல்லி நீட் போராட்டம்: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா
நீட் தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன், டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டம், ஒரு கட்டத்தில் மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையிலான மோதலாக மாறியது. போராட்டக்காரர்களை கலைக்க டெல்லி காவல்துறை தடியடி நடத்தியதுடன், கண்ணீர் புகைக் குண்டுகளையும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் 6 வயது சிறுவன் ஒருவரைச் சேர்த்து 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், போராட்டத்தை இளைஞர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
பொதுத்தேர்வுகள் வெளிப்படையான முறையில் நடைபெற வேண்டும், தவறுகளுக்கு உரிய பொறுப்பேற்பு உறுதி செய்யப்பட வேண்டும், மாணவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ளனர். மேலும், தற்போதைய தேசிய தேர்வு முகமையை கலைத்து, சட்டப்பூர்வ அதிகாரம் கொண்ட தேசிய தேர்வு ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
அதேபோல், வினாத்தாள் கசிவு, தேர்வு ரத்து மற்றும் தேர்வு ஒத்திவைப்பு போன்ற காரணங்களால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு இழப்பீடு வழங்குவதோடு, வயது வரம்பில் தளர்வும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெற்றுள்ளது.
இதனுடன், தற்போதைய வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்த நிலையில், இன்று மேலும் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கிடையில், மாணவர்களின் போராட்டத்தின் எதிரொலியாக தர்மேந்திர பிரதான் தனது மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனது ராஜினாமா குறித்து விளக்கம் அளித்த தர்மேந்திர பிரதான், “கடந்த 10 நாட்களாக நடந்துவரும் சம்பவங்கள் என்னை மனவேதனைக்குள்ளாக்கியுள்ளன. இளம் தலைமுறையின் கனவுகளை நனவாக்குவது நமது பொறுப்பு. அவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். இளைஞர் சக்தி எந்த சதிவலையிலும் சிக்க விடப்படாது,” என்று தெரிவித்துள்ளார்.