சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய நீதிபதிகள் நியமனம்: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து
சென்னை ஐகோர்ட்டில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ள நிலையில், தற்போது 51 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். இதனால் 24 பணியிடங்கள் காலியாக இருந்தன.
இந்த காலியிடங்களை நிரப்புவதற்காக மாவட்ட நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் என 19 பேரின் பெயர்களை சென்னை ஐகோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரையை சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியமும் ஏற்றுக்கொண்டு, மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பியது.பரிந்துரையை ஆய்வு செய்த மத்திய அரசு, 15 பேரை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்தது. இதற்கு ஒப்புதல் அளித்த ஜனாதிபதி, நேற்று அவர்களின் நியமனத்துக்கான உத்தரவை பிறப்பித்தார்.இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள கோவிந்தராஜன் கிருஷ்ணசாமி, ரஜ்னிஷ் பதியில், ரமேஷ் நடராஜன், ஜி.கே.முத்துக்குமார், ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோருக்கும், கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள ரவீக்குமார் சங்கரநாராயணன், திலீப் குமார் நாகராஜன், எல்லப்பன் மனோகரன், பி.
முருகன், எம்.டி.சுமதி, எஸ்.அல்லி, சி.திருமகள், சண்முகம் கார்த்திகேயன், முருகேசன் பாலுச்சாமி, என்.குணசேகரன் ஆகியோருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும், நீதியின் மாண்பையும், அரசியலமைப்பின் கொள்கைகளையும் பாதுகாத்து, அனைவருக்கும் சமநீதியும் சமூகநீதியும் கிடைக்கும் வகையில் புதிய நீதிபதிகளின் பணிகள் சிறக்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.