சுருளி அருவியில் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
தேனி மாவட்டம் கம்பம் அருகே அமைந்துள்ள சுருளி அருவி, ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீர், சுமார் 9 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதியை கடந்து வந்து உருவாகும் இயற்கை அருவியாகும். இந்த அருவியை காணவும், குளிக்கவும் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.சமீபத்தில் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் தொடர்ச்சியாக பெய்த மழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து பாதுகாப்பு காரணங்களால் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.தற்போது அருவியின் நீர்வரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதால், இரண்டு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று (திங்கள்கிழமை) காலை முதல் சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து ஏராளமானோர் உற்சாகமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.