சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தீவிரம்: சென்னை கோட்டை முன்பு போலீசார் அணிவகுப்பு ஒத்திகை
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோட்டை முன்பு காவல்துறையினர் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.நாட்டின் 80-வது சுதந்திர தினம் வரும் 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னை தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் விழாவில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் முதல் முறையாக தேசியக் கொடியை ஏற்றுகிறார். தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்க உள்ளார்.இந்த ஆண்டுக்கான சுதந்திர தின போலீஸ் அணிவகுப்பில் சிங்கப்பெண் அதிரடிப்படையும் பங்கேற்கிறது. இதையொட்டி, கோட்டை பகுதியில் விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதற்கிடையில், காவல்துறையினரின் அணிவகுப்பு ஒத்திகை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று காலை 3-வது கட்டமாக நடைபெற்ற ஒத்திகையில் பங்கேற்ற போலீசார், சுதந்திர தினத்தன்று அணியவுள்ள சீருடையுடன் ஒழுங்குடனும் மிடுக்குடனும் அணிவகுத்துச் சென்றனர்.சுதந்திர தின விழாவில், தமிழ்நாடு மற்றும் தமிழின வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தவரை கவுரவிக்கும் வகையில் ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்பட உள்ளது.
விருதுடன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையும் பாராட்டு சான்றிதழும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வழங்குகிறார்.மேலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான டாக்டர் அப்துல்கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்-அமைச்சரின் நல் ஆளுமை விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளும் விழாவில் வழங்கப்பட உள்ளன.மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக செயல்பட்டவர்களுக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனில் சிறப்பாக பங்காற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூகப் பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்-அமைச்சர் விருதுகள், முதல்-அமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளையும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வழங்கி கவுரவிக்க உள்ளார்.