சிவகாசியில் காகித அட்டை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஒருவர், கட்டிங் இயந்திரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். சிவகாசியைச் சேர்ந்த பாண்டியம்மாள், அப்பகுதியில் உள்ள காகித அட்டை தயாரிக்கும் நிறுவனத்தில் கட்டிங் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். இன்று காலை வழக்கம்போல் பணிக்கு சென்ற அவர், வேலையில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரது சேலை இயந்திரத்தில் சிக்கியது. இதையடுத்து, பாண்டியம்மாள் இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்டார். இந்த விபத்தில் அவரது கை துண்டாகியதுடன், அதிகளவில் ரத்தம் வெளியேறியது.
Advertisement
இதில் படுகாயமடைந்த பாண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார், பாண்டியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.