சென்னை அயனாவரத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில், பொதுமக்கள் அடகு வைத்திருந்த சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான நகைகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அடகு வைக்கப்பட்டிருந்த அசல் நகைகளை எடுத்துவிட்டு, அவற்றுக்குப் பதிலாக போலி நகைகளை வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டிருந்தார். வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையிலும் இதேபோன்ற முறையில் அடகு நகைகள் திருடப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பொதுமக்கள் அடகு வைத்திருந்த உண்மையான நகைகளை எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக போலி நகைகள் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வங்கியில் சுமார் ரூ.3.15 கோடி மதிப்பிலான அடமான நகைகள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.
Advertisement
இந்த வழக்கில் வங்கி ஊழியர்கள் 6 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். புழல் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் (58), கொரட்டூரைச் சேர்ந்த சரவண பாபு (58), கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியைச் சேர்ந்த கோபிகா (30), மணலி சேக்காடு பகுதியைச் சேர்ந்த துரைபாபு ஜனார்த்தனன் (50), புரசைவாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் (36), சுனிதா (51) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் புருஷோத்தமன் உதவியாளராகவும், சரவண பாபு சீனியர் மேலாளராகவும் பணியாற்றி வந்தனர். கோபிகா துணை மேலாளராகவும், துரைபாபு ஜனார்த்தனன் மேலாளராகவும், விக்னேஷ் தூய்மை பணியாளராகவும், சுனிதா குமாஸ்தாவாகவும் பணியாற்றி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என போலீசார் கூறினர்.