தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. வெயில் மற்றும் மழை என மாறுபடும் காலநிலை காரணமாக டெங்குவை பரப்பும் ‘ஏடிஸ்’ வகை கொசுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளிலும் டெங்கு பாதிப்பு பரவலாக காணப்படுகிறது. தினசரி சராசரியாக 70 முதல் 100 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து காய்ச்சல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. டெங்கு தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு, தேவையான பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 244 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Advertisement
இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை டெங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 16,577 ஆக அதிகரித்துள்ளது. டெங்கு பாதிப்பால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 87 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து கொசு ஒழிப்பு பணிகளில் 25,000-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் மருந்தகங்களில் தாங்களாகவே மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், வீடுகளைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்பைத் தடுக்க வேண்டும் என்றும், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.