சிறப்பாக பணியாற்றிய 180 பேருக்கு ‘அண்ணா சிறப்புப் பதக்கங்கள்’ - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தின் காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 180 பேருக்கு ‘தமிழக முதல்-அமைச்சரின் அண்ணா சிறப்புப் பதக்கங்கள்’ வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக செயல்படும் அலுவலர்கள் மற்றும் சார்நிலை அலுவலர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் தேதி முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு காவல் துறையில் தலைமைக் காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 138 பேருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர் வரையிலான 20 பேருக்கும் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் முதல்நிலை சிறைக்காவலர் முதல் துணை சிறை அலுவலர் வரையிலான 10 பேருக்கும், ஊர்க்காவல் படையில் ஊர்க்காவல் படைவீரர் முதல் படைத்தளபதி வரையிலான 5 பேருக்கும், விரல்ரேகைப் பிரிவைச் சேர்ந்த 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும், தடய அறிவியல் துறையைச் சேர்ந்த 4 அலுவலர்களுக்கும் ‘தமிழக முதல்-அமைச்சரின் அண்ணா சிறப்புப் பதக்கங்கள்’ வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கடலில் சிக்கிய சிறுவனை மீட்ட தீயணைப்பு வீரர் கடந்த 19.05.2026 அன்று காலை சுமார் 9.45 மணியளவில் நாகர்கோவில் லெமூரியா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த கணபதிபுரத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் ராட்சத கடல் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.