சத்தியமங்கலம் அருகே கரும்பு லாரியை வழிமறித்த ஒற்றை யானை: வாகன ஓட்டிகள் பீதி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி சாலையில் கரும்பு ஏற்றிச் சென்றஒற்றைக் காட்டு யானை வழிமறித்து, அதிலிருந்த கரும்புகளைத் தும்பிக்கையால் அள்ளி சாப்பிட்ட சம்பவம் வாகன ஓட்டிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ் நகர் மற்றும் தாளவாடி மலைப்பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான லாரிகள் கரும்புக் கட்டுகளை ஏற்றிக்கொண்டு திம்பம் மலைப்பாதை வழியாக சத்தியமங்கலத்தில் செயல்படும் சர்க்கரை ஆலைகளுக்கு செல்கின்றன. இந்தப் பயணத்தின் போது லாரிகளில் இருந்து கீழே விழும் கரும்புகளை உணவாக எடுத்துக்கொள்ள பழகியுள்ள காட்டு யானைகள், கரும்பின் மணத்தால் ஈர்க்கப்பட்டு சாலையோரங்களில் அடிக்கடி காத்திருப்பது வழக்கமாக உள்ளது.இந்த நிலையில், தாளவாடி–திம்பம் மலைப்பாதை வழியாக கரும்பு ஏற்றிய லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தபோது, அடர்ந்த வனப்பகுதியில் இருந்து திடீரென வெளியே வந்த ஒற்றைக் காட்டு யானை அதன் முன் நின்று லாரியை நிறுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை நிறுத்தினார். பின்னர் லாரியின் முன்பகுதிக்கு வந்த யானை, தும்பிக்கையை நீட்டி அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கரும்புத் துண்டுகளை அள்ளி இழுத்து சுவைத்தது.யானை சாலையின் நடுப்பகுதியில் நீண்ட நேரம் நின்று கரும்புகளை சாப்பிட்டதால், திம்பம் மலைப்பாதை மற்றும் சத்தியமங்கலம்–மைசூர் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதன் காரணமாக சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அச்சமடைந்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களிலேயே காத்திருந்தனர்.சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, சத்தம் எழுப்பி யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர். அதன் பின்னரே லாரி ஓட்டுநர் மற்றும் பிற வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக தங்கள் பயணத்தைத் தொடர முடிந்தது.இதேபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, கரும்பு ஏற்றிச் செல்லும் லாரிகளை தார்ப்பாயால் முழுமையாக மூடி இயக்க வேண்டும் என்றும், யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கும் நடவடிக்கைகளையும் வனத்துறை தீவிரப்படுத்தி வருகிறது.