கைதுக்கு அஞ்சுபவன் நான் அல்ல: உதயநிதி ஸ்டாலின்
தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின் போது ஆபாசமாக பேசியதாக கூறி பதிவு செய்யப்பட்ட வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவரை போலீசார் தஞ்சைக்கு அழைத்துச் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டது குறித்து தான் பேசியதாக தெரிவித்தார். மேலும், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சமூக வலைதள 'ரீல்ஸ்' மீது அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் விமர்சித்தார்.தான் கூறாத கருத்துகளை கூறியதாக சித்தரித்து, வெட்டி ஒட்டி பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்றும், அதன் அடிப்படையிலேயே தனது மீது தவறான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
கைது நடவடிக்கையை தாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு அஞ்சும் நபர் அல்ல என்றும் தெரிவித்தார்.மேலும், திமுகவின் சாதாரண தொண்டர் கூட கைது நடவடிக்கைக்கு பயப்பட மாட்டார் என்று கூறிய அவர், காவிரி பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கத்திலேயே தனது கைது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.