காஷ்மீரில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு
காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள கேலம் பகுதியில் வெளிமாநில தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.
காஷ்மீரில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் மீது அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று மாலை கேலம் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு செங்கல் சூளைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த பயங்கரவாதிகள், அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில் குண்டுகள் பாய்ந்து இரு தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அனந்த்நாக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதும், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடந்த பகுதியை முற்றுகையிட்டு, தப்பிச் சென்ற பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.வெளிமாநில தொழிலாளர்களை குறிவைத்து நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் காஷ்மீரில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.