தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே, பெற்றோரின் எதிர்ப்பை மீறி மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்த மகளையும், அவரது கணவரையும் பெண்ணின் தந்தை வீடு புகுந்து அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலங்குளத்தைச் சேர்ந்த ஆகாஷ் (23), நெல்லை மாவட்டம் மேலஅரியநாயகிபுரத்தைச் சேர்ந்த சுஷ்மிதா (21) ஆகியோர் கல்லூரியில் படித்தபோது காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், சுஷ்மிதாவின் குடும்பத்தினர் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி சுமார் 3 மாதங்களுக்கு முன்பு ஆகாஷும் சுஷ்மிதாவும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு இருவரும் பாவூர்சத்திரம் அருகேயுள்ள சிவகாமிபுரம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். மகள் மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்ததால் அவரது தந்தை முருகன் ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, நேற்று (வியாழக்கிழமை) இரவு சிவகாமிபுரத்தில் தம்பதியினர் வசித்து வந்த வீட்டுக்குள் முருகன் திடீரென நுழைந்துள்ளார்.
Advertisement
அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த முருகன், ஆகாஷின் தலை மற்றும் கால்களில் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. கணவரை காப்பாற்ற சுஷ்மிதா முயன்ற நிலையில், அவரது கையிலும் முருகன் அரிவாளால் தாக்கியுள்ளார். தம்பதியினரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதையடுத்து முருகன், தான் வந்த மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானார். படுகாயமடைந்து உயிருக்கு போராடிய ஆகாஷ் மற்றும் சுஷ்மிதாவை பொதுமக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள சுஷ்மிதாவின் தந்தை முருகனை போலீசார் தேடி வருகின்றனர். மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்த மகளையும், அவரது கணவரையும் தந்தையே அரிவாளால் தாக்கிய சம்பவம், இது ஆணவக்கொலை முயற்சியா என்ற கேள்வியை எழுப்பியுள்ளதுடன், அப்பகுதியில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.