கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: அரசு பணியை எதிர்த்த மனுதாரருக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கேள்வி; ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இதற்கிடையில், கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கும் வகையில் கடந்த மாதம் 10-ஆம் தேதி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.இந்த நடவடிக்கையை எதிர்த்து, நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை நிர்வாகி தீரன் திரு முருகன், மதுரையைச் சேர்ந்த சீனி முகமது மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த சந்தோஷ் குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதற்காக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்து கடந்த மாதம் 27-ஆம் தேதி தீர்ப்பளித்தது.இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டதில் மனுதாரர்களுக்கு என்ன பிரச்சினை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், அரசு வேலை வழங்கக் கூடாது என்று கூறுவதற்கு அவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்றும் சரமாரியாக கேள்வி கேட்டனர்.கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் மிகவும் துயரமானது என்றும், இதுபோன்ற விவகாரங்களில் அரசியல் செய்யக் கூடாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.