ஓசூரில் பரபரப்பு சம்பவம்; பயணியை பஸ்சில் தொங்கவிட்ட டிரைவர் – வைரலான வீடியோவால் நடவடிக்கை
ஓசூரில் இருந்து பாகலூர் வழியாக பேரிகைக்கு சென்ற டவுன் பஸ்சை ரமேஷ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்த பஸ்சில் பயணம் செய்த ஒருவர், பாகலூர் அருகே உள்ள அச்சந்திரம் கிராமத்தில் இறங்க வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது.ஆனால், அந்த இடத்தில் பஸ்சை நிறுத்தாமல் சென்ற டிரைவர், தும்மனப்பள்ளி கிராமத்தில் பஸ்சை நிறுத்தி அந்த பயணியை இறக்கிவிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பயணி, பஸ்சின் முன்பகுதிக்குச் சென்று டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.இந்நிலையில், பயணி பஸ்சின் முன்புறத்தில் நின்றுகொண்டிருந்தபோதும், டிரைவர் பஸ்சை இயக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணி, தன்னை காப்பாற்றிக்கொள்ள பஸ்சின் முன்பக்க கண்ணாடிக்கு கீழ் உள்ள பகுதியை கைகளால் இறுகப் பிடித்தபடி தொங்கியுள்ளார்.ஆனாலும், பஸ் நிறுத்தப்படாமல் தொடர்ந்து இயக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்ற பின்னர் டிரைவர் பஸ்சை நிறுத்தியதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலான நிலையில், டிரைவர் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை பணி இடைநீக்கம் செய்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.