எதிர்க்கட்சி தலைவரை சிறையில் அடைப்பதை தவிர்க்க வேண்டும்; திருமாவளவன் வலியுறுத்தல்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், எதிர்க்கட்சி தலைவரை சிறையில் அடைக்கும் நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், காவிரி நீர் உரிமையை வலியுறுத்தி தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது, இரட்டை அர்த்தம் தரும் வகையில் நகைச்சுவை கலந்த கருத்தை தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.அப்போது, எதிர்க்கட்சிகள் மீது பொய்வழக்குகள் பதிவு செய்வதிலேயே முதலமைச்சரின் கவனம் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறியபோது, கூட்டத்தில் இருந்தவர்கள் பிரபல நடிகை ஒருவரின் பெயரை முழக்கமிட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அவர் கிண்டலாக கூறிய கருத்து தவறான பொருள் தரும் வகையில் அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார். அந்த பேச்சு ஆங்கில ஊடகங்களிலும் விவாதத்திற்கும் கண்டனத்திற்கும் உள்ளாகி தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எதிர்க்கட்சி தலைவர் போன்ற பொறுப்பான பதவியில் இருப்பவர், இரட்டை அர்த்தம் தரக்கூடிய எள்ளல் நிறைந்த சொற்களை பயன்படுத்தாமல் இருந்திருக்க வேண்டும் என்றும், ஒரு பெண்ணை இழிவாக சித்தரிக்கும் வகையில் புரிந்துகொள்ளப்படும் கருத்துகள் அவரது அரசியல் பொறுப்புக்கும் நாகரிக அரசியல் நடைமுறைக்கும் பொருத்தமற்றவை என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.மேலும், கூட்டத்தில் இருந்தவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பேசும் நோக்கில் உணர்ச்சிவசப்பட்டு தன்னிலை மறந்து பேசும் அணுகுமுறையை கைவிட வேண்டும் என்றும், பெண்களை இழிவுபடுத்துவதாகப் புரிந்துகொள்ளப்படும் வகையிலான கருத்துகள் கண்டிக்கத்தக்கவை என்றும் அவர் கூறியுள்ளார்.நாளை சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பதவியில் உள்ளவரை சிறையில் அடைப்பதை தவிர்ப்பது ஆளுங்கட்சியின் மீதான நல்லெண்ணத்தை உயர்த்தும் என்றும், தற்போதைய சூழலில் காவிரி நீர் உரிமைக்காக அனைத்துக் கட்சிகளும் பொதுமக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும் அது உதவியாக இருக்கும் என்றும் திருமாவளவன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.