உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியில் செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்வு
உளுந்தூர்பேட்டை அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில், செப்டம்பர் 1-ந் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.இதுதொடர்பாக திருச்சி டோல்வே பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கான ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.70-ஆகவே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் பலமுறை பயணம் செய்வதற்கான கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.105-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.2,125-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இலகுரக வணிக வாகனங்களுக்கான ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.120-ல் இருந்து ரூ.125-ஆகவும், பலமுறை பயணம் செய்வதற்கான கட்டணம் ரூ.180-ல் இருந்து ரூ.185-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கான மாதாந்திர பாஸ் ரூ.3,715-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.லாரி மற்றும் பேருந்துகளுக்கான ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.240-ல் இருந்து ரூ.250-ஆகவும், பலமுறை பயணக் கட்டணம் ரூ.355-ல் இருந்து ரூ.370-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.7,435-ஆக இருக்கும்.பல அச்சுகள் கொண்ட கனரக வாகனங்களுக்கு ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.380-ல் இருந்து ரூ.400-ஆகவும், பலமுறை பயணம் செய்வதற்கான கட்டணம் ரூ.575-ல் இருந்து ரூ.595-ஆகவும் அதிகரிக்கிறது. இந்த வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.11,950-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த சுங்கக் கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.