உத்தரகாண்ட் சுரங்கத்தில் வெள்ளம்: 7 பேர் பலி, 2 பேர் சிக்கி தவிப்பு
உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் நீர்மின் திட்ட சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் சுரங்கத்துக்குள் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமோலி மாவட்டத்தின் பிபல்கோட்டி பகுதியில் நீர்மின் திட்டத்துக்கான சுரங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் எதிர்பாராத விதமாக அதிகளவு வெள்ளநீர் சுரங்கத்துக்குள் புகுந்தது. அப்போது, நீருடன் சேர்ந்து மண், கற்கள் மற்றும் பிற கழிவுப் பொருட்களும் சுரங்கத்திற்குள் அடித்துச் செல்லப்பட்டன.
சம்பவம் நடைபெற்ற நேரத்தில் சுரங்கத்துக்குள் 28 தொழிலாளர்கள் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. வெள்ளநீரின் வேகம் அதிகமாக இருந்ததால் பலர் அதில் சிக்கிக்கொண்டனர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன.
இதுவரை 18 தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 3 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் இணைந்து சுரங்கத்துக்குள் தேங்கியுள்ள மண், கற்கள் மற்றும் இடிபாடுகளை அகற்றி, சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையில், உத்தரகாண்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன், பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. மேலும், வரும் 17-ஆம் தேதி வரை மாநிலத்தில் கனமழை தொடரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் நிலச்சரிவும் பதிவாகி வருகிறது.