அலங்காநல்லூர் அருகே டேங்கர் லாரி வெறியாட்டம்: மதுபோதை ஓட்டுநரால் தொடர் விபத்து; ஒருவர் பலி
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மதுபோதையில் டேங்கர் லாரியை இயக்கிய ஓட்டுநர் அடுத்தடுத்து பல வாகனங்களில் மோதியதால் ஒருவர் உயிரிழந்ததுடன், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்துக்குப் பிறகும் தப்பிச் செல்ல முயன்ற ஓட்டுநரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஜெயப்பிரகாஷ் என்பவர், கடுமையான மதுபோதையில் டேங்கர் லாரியை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. போதையின் காரணமாக லாரியின் கட்டுப்பாட்டை இழந்த அவர், சாலையில் சென்றுகொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த விபத்தில் முத்துப்பாண்டி என்பவர் பலத்த காயமடைந்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மேலும், விபத்தில் சிக்கிய மற்ற வாகனங்களில் பயணித்த 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்தை ஏற்படுத்திய பிறகும் லாரியை நிறுத்தாமல் ஜெயப்பிரகாஷ் தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் லாரியை விரட்டிச் சென்று வழிமறித்து நிறுத்தினர். பின்னர், போதையில் இருந்த ஓட்டுநரை லாரியில் இருந்து கீழிறக்கி தாக்கியதாக கூறப்படுகிறது.தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த அலங்காநல்லூர் போலீசார், பொதுமக்களிடம் இருந்து ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்து மற்றும் பொதுமக்கள் தாக்குதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் ஏற்பட்ட இந்த விபத்து அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.