அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘கல்லா நிக்கிறியே’ நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வித்தியாசமான படங்களைத் தேர்வு செய்து நடித்து வருபவர் அசோக் செல்வன். ‘சூதுகவ்வும்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அவர், தொடர்ந்து பல்வேறு கதைக்களங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார். ‘நித்தம் ஒரு வானம்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஹாஸ்டல்’, ‘மன்மத லீலை’, ‘போர் தொழில்’ உள்ளிட்ட திரைப்படங்கள் அசோக் செல்வனின் நடிப்புக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன. குறிப்பாக ‘போர் தொழில்’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது. இதையடுத்து ‘தக் லைப்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் ‘சபாநாயகன்’, ‘ப்ளூ ஸ்டார்’, ‘பொன் ஒன்று கண்டேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், சமீபத்தில் ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், அசோக் செல்வன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘அன்பில் அவன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ப்ரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘போர் தொழில்’ படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
Advertisement
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தை, ‘ஓ மை கடவுளே’ படத்தை தயாரித்த ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘அன்பில் அவன்’ படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படத்தின் அதிரடி காட்சிகளுக்கு சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் பணியாற்றியுள்ளார். காதல் மற்றும் ஆக்ஷன் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், அசோக் செல்வனின் முந்தைய படங்களிலிருந்து மாறுபட்ட அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், திரைப்படத்தின் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘அன்பில் அவன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இது அசோக் செல்வனின் 23-வது திரைப்படமாகும். இந்நிலையில், கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியுள்ள ‘கல்லா நிக்கிறியே’ பாடல் நாளை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் இரண்டாவது பாடலாக வெளியாகும் இந்தப் பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். செப்டம்பர் 25-ம் தேதி ‘அன்பில் அவன்’ திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், புதிய பாடல் குறித்த அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.