அசாம் வெள்ள நிவாரணத்திற்கு உதவுங்கள்... ரசிகர்களிடம் ஆலியா பட் உருக்கமான கோரிக்கை
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை காரணமாக பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், 10-க்கும் அதிகமான மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.
இந்த வெள்ள பாதிப்பில் சிக்கி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல மாவட்டங்களில் ஆற்றங்கரைகள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.இந்நிலையில், அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு உதவுமாறு பாலிவுட் நடிகை ஆலியா பட் தனது ரசிகர்களிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஆலியா பட் வெளியிட்ட பதிவில், “நாட்டின் பல பகுதிகள் தற்போது வெள்ள பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. அதில் அசாம் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. அங்குள்ள மக்கள் மிகவும் சவாலான சூழ்நிலையில் உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.மேலும், “ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற வெள்ளப் பேரழிவுகள் ஏற்படுகின்றன.
இருப்பினும், ஒவ்வொரு முறையும் இதுபோன்ற நிலை நம்மை எதிர்பாராத சூழலுக்கு கொண்டு செல்கிறது. தற்போது அசாம் மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் தேவைப்படுகின்றன. அதேபோல், மீட்பு மற்றும் மறுவாழ்வு பணிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டியது அவசியம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வரும் அமைப்புகள் மூலம் எவ்வாறு நிவாரணப் பணிகளில் பங்கேற்கலாம் என்பது தொடர்பான தகவல்களை விரைவில் பகிர உள்ளதாகவும் ஆலியா பட் தெரிவித்துள்ளார்.அசாம் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு நடிகர் சல்மான் கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ஆலியா பட்டின் இந்த வேண்டுகோளும் முக்கிய கவனம் பெற்றுள்ளது.