7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகிறாரா சீன அதிபர் ஜி ஜின்பிங்?
டெல்லியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது இந்தியப் பயணம் உறுதி செய்யப்பட்டால், 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்தியா வருவார்.
செப்டம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் ஜி ஜின்பிங் சுமார் 400 அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு அவர் இந்தியா வந்தபோது 200-க்கும் குறைவான அதிகாரிகள் உடன் வந்திருந்தனர். இந்த முறை அந்த எண்ணிக்கை இரு மடங்குக்கும் அதிகமாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், பிரிக்ஸ் அமைப்பின் ஒத்துழைப்புக்கு சீனா அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பில் உள்ள இந்தியா இந்த ஆண்டு மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு சீனா ஆதரவு அளிக்கும் என்றும் கூறியுள்ளது. அதேவேளையில், ஜி ஜின்பிங்கின் இந்தியப் பயணம் குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைக்காக சீனா சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன துணை அதிபர் ஹான் செங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவது, பரஸ்பர உறவை மேம்படுத்துவது மற்றும் பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருவரும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்களும், 4 சீன வீரர்களும் உயிரிழந்தனர். இதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக ராணுவ பதற்றம் நீடித்தது. 2024-ம் ஆண்டு அக்டோபரில் எல்லைப் பகுதிகளில் படைவிலகல் ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா-சீனா உறவில் படிப்படியான முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது.ஜி ஜின்பிங்கின் இந்தியப் பயணத் திட்டம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடனான இருதரப்பு சந்திப்பு தொடர்பான நிகழ்ச்சி நிரல் குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.பிரிக்ஸ் மாநாட்டின்போது பிரதமர் மோடியும் ஜி ஜின்பிங்கும் சந்தித்துக் கொண்டால், இந்தியா-சீனா உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான முக்கியமான நடவடிக்கையாக அது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.