ஜெய்சங்கர்–புதின் சந்திப்பு: இந்தியாவுக்கு உரம் தொடர்ந்து வழங்க ரஷ்யா உறுதி
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியாவுக்கு உரங்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய ரஷ்யா நடவடிக்கை எடுத்து வருவதாக புதின் தெரிவித்தார்.சந்திப்பில் இந்தியா–ரஷ்யா இடையேயான வர்த்தகம் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்புடன், உரம், அணுசக்தி, உயர் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செய்தியையும் ஜெய்சங்கர், புதினிடம் வழங்கினார்.இந்திய விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, நாட்டுக்கு தொடர்ந்து உரங்களை வழங்குவதற்கான முயற்சிகளை ரஷ்யா மேற்கொண்டு வருவதாக புதின் கூறினார். உர ஏற்றுமதியை மேலும் அதிகரிக்கவும் ரஷ்யா தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார்.
இந்திய விவசாயிகள் மற்றும் வேளாண் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் ரஷ்யா மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.இந்தியா–ரஷ்யா இடையேயான வர்த்தகம் மீண்டும் வளர்ச்சியடைந்து வருவதாகவும் புதின் குறிப்பிட்டார். இரு நாடுகளின் உறவை தொடர்ந்து வலுப்படுத்துவதில் பிரதமர் மோடி முக்கிய பங்காற்றி வருவதாகவும் அவர் கூறினார். ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் கிர்கிஸ்தானில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின்போது பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாகவும் புதின் தெரிவித்தார்.இதனிடையே, பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியை வரவேற்க ஆவலுடன் இருப்பதாக ஜெய்சங்கர், புதினிடம் தெரிவித்தார்.