3 நாட்களில் ரூ.40 கோடி வசூல்; பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் சென்னை லவ் ஸ்டோரி
நடிகை ஸ்ரீ கவுரி பிரியா நடித்துள்ள தெலுங்கு திரைப்படமான ‘சென்னை லவ் ஸ்டோரி’ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.தமிழில் வெளியான ‘மாடர்ன் லவ் சென்னை’ இணையத் தொடரின் மூலம் கவனம் பெற்ற கவுரி பிரியா, பின்னர் ‘லவ்வர்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். தற்போது அவர் தெலுங்கு திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.‘பேபி’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, எழுத்தாளர் சாய் ராஜேஷ் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.கே.என். ஆகியோர் மீண்டும் இணைந்து ‘சென்னை லவ் ஸ்டோரி’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். இப்படத்தின் கதையை சாய் ராஜேஷ் எழுதியதுடன், தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் செயல்பட்டுள்ளார்.
ரவி வர்மா நம்பூரி இயக்கிய இந்த திரைப்படம் கடந்த ஜூலை 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.மாஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், கிரண் அப்பாவரம் கதாநாயகனாகவும், ஸ்ரீ கவுரி பிரியா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.இந்த நிலையில், ‘சென்னை லவ் ஸ்டோரி’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியான முதல் மூன்று நாட்களில் ரூ.40.1 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக படக்குழு புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. முதல் வார இறுதியில் ரசிகர்களின் அமோக ஆதரவால் இந்த சாதனை நிகழ்ந்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.