2040-க்குள் இந்தியரை நிலவுக்கு அனுப்ப இலக்கு; 2035-ல் சொந்த விண்வெளி நிலையம் – இஸ்ரோ தலைவர்
இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையத்தை 2035-ம் ஆண்டுக்குள் அமைப்பதையும், 2040-ம் ஆண்டுக்குள் இந்திய ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி வீரரை நிலவுக்கு அனுப்புவதையும் இலக்காகக் கொண்டு இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டு வருவதாக அதன் தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் பேசியபோது, 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கில் கல்வி நிறுவனங்கள், தொழில் துறைகள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகள் இணைந்து செயல்படுவது மிகவும் அவசியம் என்றார். ஆராய்ச்சிகள் அறிவியல் கட்டுரைகளாக மட்டுமே முடிவடையாமல், சமூகத்திற்கு பயன்படும் தொழில்நுட்பங்கள், காப்புரிமைகள் மற்றும் தயாரிப்புகளாக உருவாக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இஸ்ரோவின் செயற்கைக்கோள்கள் தற்போது தொலைத்தொடர்பு, வானிலை முன்னறிவிப்பு, பேரிடர் மேலாண்மை, விவசாயம், மீன்வளம், நீர்வள மேலாண்மை மற்றும் எல்லை பாதுகாப்பு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட துறைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, செயற்கைக்கோள் தகவல்களின் அடிப்படையில் வழங்கப்படும் ஆலோசனைகள் மீனவர்களின் வருமான உயர்வுக்கு முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.ஆரம்ப காலங்களில் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், இந்தியா உள்நாட்டிலேயே கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்க சாதனை என்றும் அவர் கூறினார். மேலும், ஏவுதல் தொழில்நுட்பத்தில் இந்தியா சர்வதேச அங்கீகாரம் பெற்றிருப்பதையும் நினைவுகூர்ந்தார்.'சந்திரயான்' திட்டம் மற்றும் ஒரே ஏவுதலில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய சாதனை ஆகியவை இஸ்ரோவின் முக்கிய மைல்கற்களாக அமைந்துள்ளன என்றும்அவர்தெரிவித்தார்.மாணவர்கள் கூட்டு ஆராய்ச்சிகளில் ஈடுபடவும், பயிற்சி பெறவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் அதிக வாய்ப்புகளை இஸ்ரோ தொடர்ந்து வழங்கும் என்றும் வி. நாராயணன் தெரிவித்தார்.