100 கோடி பயனர்களை கடந்த கூகுள் ஜெமினி; தினமும் 15 கோடி ஏ.ஐ. படங்கள் உருவாக்கம்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏ.ஐ. அடிப்படையிலான உரையாடல் செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளன.இந்த ஏ.ஐ. சாட்பாட்கள் மூலம் பயனர்கள் தேவையான தகவல்களை எளிதாகப் பெறுவதுடன், மனிதர்களைப் போல உரையாடுதல், ஆலோசனைகளை வழங்குதல், கருத்துகளைப் பகிர்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், மாணவர்களின் பாடப்பணிகளைத் தயாரிப்பது முதல் கணினி நிரலாக்கம் தொடர்பான பணிகள் வரை பல துறைகளில் இத்தொழில்நுட்பம் பயன்பட்டு வருகிறது.அந்த வகையில், கூகுள் அறிமுகப்படுத்திய செயற்கை நுண்ணறிவு உரையாடல் செயலியான ஜெமினி, குறுகிய காலத்திலேயே அதிகமான பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக, பயனர்கள் வழங்கும் 'பிராம்ட்' அடிப்படையில் பல்வேறு வகையான படங்களை உருவாக்கும் திறன் ஜெமினிக்கு தனித்துவமான வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது.கூகுளின் 14-வது தயாரிப்பாக அறிமுகமான ஜெமினி, அந்நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிக விரைவாக 100 கோடி பயனர்களை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், 63 சதவீத பயனர்கள் தங்களது கேள்விகளை தட்டச்சு செய்வதற்குப் பதிலாக நேரடியாக குரல் மூலம் கேட்டு பதில்களைப் பெற்றுள்ளனர்.மேலும், ஜெமினி செயலியின் உதவியுடன் தினமும் 15 கோடிக்கும் அதிகமான செயற்கை நுண்ணறிவு படங்கள் உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதேபோல், ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்தும் 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஜெமினி செயலியை பயன்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.