10 நாட்கள் இடைவேளைக்குப் பிறகு திறக்கப்பட்ட அகஸ்தியர் அருவி; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
பாபநாசம் அருகே அமைந்துள்ள அகஸ்தியர் அருவிக்கு 10 நாட்கள் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று முதல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, அருவிப் பகுதியில் ஏராளமானோர் குவிந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் கடந்த 12-ஆம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்றது. இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகள் காரணமாக, கோவிலுக்கு கீழ்பகுதியில் உள்ள பிரபலமான அகஸ்தியர் அருவிக்கு கடந்த 7-ஆம் தேதி முதல் 10 நாட்கள் பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.இந்தத் தடை நேற்று முன்தினத்துடன் முடிவடைந்த நிலையில், நேற்று முதல் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவிக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.இதனால், காலை முதலே குடும்பத்தினருடன் வந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.அதேபோல், சொரிமுத்து அய்யனார் கோவிலில் நடைபெற்ற தூய்மைப் பணிகள் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக மூடப்பட்டிருந்த பாபநாசம் வனச் சோதனைச் சாவடியும் நேற்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இதையடுத்து, சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கும் பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டனர்.