10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுக்கு மத்திய அரசு அனுமதி
இந்தியாவில் இதுவரை பயன்படுத்தப்பட்டு வரும் ரூபாய் நோட்டுகள் அனைத்தும் காகிதத்தில் அச்சிடப்பட்டவையாகும். ஆனால், முதல்முறையாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் முயற்சிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக, 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகள் சோதனை அடிப்படையில் புழக்கத்தில் விடப்பட உள்ளன. இதற்கான பரிந்துரையை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய நிலையில், அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
முதற்கட்டமாக 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் தலா 100 கோடி எண்ணிக்கையில் அச்சிட்டு வெளியிட ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தால், எதிர்காலத்தில் மேலும் பல மதிப்புகளில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது.
மேலும், காகித நோட்டுகளுடன் ஒப்பிடும்போது பிளாஸ்டிக் நோட்டுகள் நீண்ட காலம் பயன்பாட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள விளக்கத்தில், தற்போது பயன்பாட்டில் உள்ள காகித ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படமாட்டாது என்றும், காகித மற்றும் பிளாஸ்டிக் நோட்டுகள் இரண்டும் ஒரே நேரத்தில் புழக்கத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காகித நோட்டுகளை முழுமையாக மாற்றும் திட்டம் தற்போது இல்லை என்றும், இது ஆரம்பகட்ட சோதனை முயற்சி மட்டுமே என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.எளிதில் கிழியாத மற்றும் சேதமடையாத தன்மை கொண்ட பிளாஸ்டிக் நோட்டுகள் நீண்ட நாட்கள் பயன்படுத்தக்கூடியவை என்பதால், நோட்டுகளை அடிக்கடி மாற்ற வேண்டிய தேவையை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது.