ரூ.900 கோடி விவகாரம்: சட்டசபையில் ஆதவ் அர்ஜுனா - உதயநிதி இடையே கடும் வார்த்தைப் போர்
தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்றபோது, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
விவாதத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மதுவிலக்கு மற்றும் போதையற்ற தமிழகம் என்பதே தங்களது கட்சியின் கொள்கை எனக் குறிப்பிட்டார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் தங்களது கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களோ, அமைச்சர்களோ எந்த தொழிலிலும் ஈடுபடவில்லை என்று அவர் தெரிவித்தார்.தொடர்ந்து திமுகவை விமர்சித்த அவர், அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் சாராய ஆலை நடத்துகிறாரா என்று கேள்வி எழுப்பினார். மேலும், திமுக ஆட்சியில் அக்கட்சியுடன் தொடர்புடையவர்கள் சாராய ஆலைகளை நடத்துவதாகவும், டாஸ்மாக் மூலம் அவர்களுக்கு ஆர்டர்கள் வழங்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். திமுக பொருளாளரும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும் சாராய ஆலை நடத்துவதாகவும் அவர் கூறினார்.
இந்தக் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள், லாட்டரி விவகாரத்தை முன்வைத்தனர்.
அதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, "லாட்டரி குறித்து பேசுகிறீர்கள். அப்படியானால், லாட்டரி நிறுவனத்திடம் இருந்து மு.க. ஸ்டாலின் ரூ.900 கோடி பெற்றது ஏன்? தைரியம் இருந்தால் அதற்கு பதில் சொல்லுங்கள். நான் எந்த தொழிலும் செய்யவில்லை; எந்த நிறுவனத்தையும் நடத்தவில்லை," என்று தெரிவித்தார்.இதற்கு உடனடியாக பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, "திமுக லாட்டரி நிறுவனத்திடம் இருந்து ஏன் பணம் பெற்றது என்று கேட்கிறார். அந்தப் பணத்தை வழங்கியது அவருடைய மாமனார்தான். அதற்கான விளக்கத்தை அவரிடமே கேட்டு தெரிந்துகொள்ளலாம்," என்று கூறினார்.அதற்கு மீண்டும் பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, "அந்த விவரம் அவருடைய அப்பாவுக்குத்தான் தெரியும். அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. வீட்டுக்குச் சென்று உங்கள் அப்பாவிடம் கேட்டால், ரூ.900 கோடி ஏன் பெறப்பட்டது என்பதை அவர் விளக்குவார்," என்று தெரிவித்தார்.