மெல்பர்ன் இந்திய திரைப்பட விழாவில் ரிஷப் ஷெட்டிக்கு உயரிய கவுரவம்
நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டிக்கு, மெல்பர்ன் இந்திய திரைப்பட விழாவில் வழங்கப்படும் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான ‘லீடர்ஷிப் இன் சினிமா’ (திரைப்படத்தில் தலைமைத்துவம்) விருது அறிவிக்கப்பட்டுள்ளது.2022-ஆம் ஆண்டு வெளியான ‘காந்தாரா’திரைப்படத்தின் மூலம் திரைக்கதை, இயக்கம் மற்றும் கதாநாயகன் என பல பொறுப்புகளை ஏற்று இந்திய திரையுலகில் தனித்த அடையாளத்தை உருவாக்கிய ரிஷப் ஷெட்டி, அந்தப் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார். அதன் பின்னர் ‘காந்தாரா: அத்தியாயம் 1’ படத்தை வெளியிட்ட அவர், தற்போது ‘ஜெய் ஹனுமான்’ என்ற பான்-இந்தியா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள மெல்பர்ன் இந்திய திரைப்பட விழாவில் 36 மொழிகளைச் சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த விழாவில் ரிஷப் ஷெட்டி நடுவராகவும் பங்கேற்கிறார்.இந்த நிலையில், உள்ளூர் கலாசாரத்தை உலக அரங்கில் கொண்டு சென்ற அவரது பங்களிப்பை பாராட்டும் வகையில், விழாவின் மிக உயரிய விருதான ‘லீடர்ஷிப் இன் சினிமா’ விருது அவருக்கு வழங்கப்பட உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.இந்த அங்கீகாரம் குறித்து ரிஷப் ஷெட்டி கூறுகையில், “இந்த விருதைப் பெறுவது எனக்கு மிகுந்த பெருமையாக உள்ளது.
கதை சொல்லும் கலை என்பது நம்மை உருவாக்கிய கலாசாரம் மற்றும் பண்பாட்டை கொண்டாடும் ஒரு வழியாகும். நமது பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் உள்ளூர் கதைகள் உலகம் முழுவதும் மக்களை சென்றடைவது மிகுந்த அர்த்தமுள்ளதாக நான் கருதுகிறேன். மெல்பர்னுக்கு சென்று திரைப்படக் கலைஞர்களையும் ரசிகர்களையும் சந்தித்து இந்த தருணத்தை பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.