முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: ஆக., 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், 2016 முதல் 2021 வரை அமைச்சராக இருந்த காலத்தில், தனது பெயரிலும் மனைவி ரம்யா பெயரிலும் வருமானத்தை விட அதிக மதிப்பிலான சொத்துகளை சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் 2021-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர்.அதனைத் தொடர்ந்து, விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய வீடு, கல்குவாரி, அலுவலகம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 56 இடங்களில் ஊழல் தடுப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
விசாரணை நடைபெற்று வந்த காலத்தில் சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா அவ்வப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர்.இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையின்போது இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.