மதுரை மேலூர் அருகே கோர விபத்து: 3 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் 3 வயது குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னையிலிருந்து மதுரை நோக்கி வந்த கார், இன்று (ஆகஸ்ட் 3) காலை சுமார் 6.30 மணியளவில் மேலூர் அருகேயுள்ள தும்பைப்பட்டி பகுதியில் விபத்துக்குள்ளானது. பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து, அது சாலையின் நடுப்பகுதியில் உள்ள சென்டர் மீடியனைத் தாண்டி எதிர்திசையில் திருச்சி நோக்கிச் சென்ற மற்றொரு கார் மீது கவிழ்ந்து மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில், சென்னை வாடிபாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் உள்ளிட்ட இரு ஆண்கள், ராஜகுமாரி மற்றும் ரஞ்சனா ஆகிய இரு பெண்கள், மேலும் பிரணிகா (3) என்ற பெண் குழந்தை என மொத்தம் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அவர்கள் அனைவரும் சென்னை முதல் மதுரை நோக்கி வந்த காரில் பயணம் செய்து கொண்டிருந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.அதே நேரத்தில், மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற காரில் இருந்த ஒருவரைச் சேர்த்து இருவர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.